சினி நிகழ்வுகள்

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற ‘சாட் பூட் த்ரி’

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள ‘சாட் பூட் த்ரி’ தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது.
விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன்பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் பு. பாஸ்கரன், கலந்து கொண்டு இயக்குனரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது. படத்தில் இடம் பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கிடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர். 2016-இம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் இந்திய திரைப்படம் “சாட் பூட் த்ரி” என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சாட் பூட் த்ரி திரைப்படத்தின் ஒளிப்பதிவு சுதர்சன் ஸ்ரீநிவாசன், கலை ஆருச்சாமி. தொகுப்பாளர் பரத் விக்ரமன். இசை பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா. திரைக்கதை ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன்.