மகா வீர்யர் பட விமர்சனம்

நிஜ சம்பவங்களை விட சில சமயம் கற்பனைக் கதைகளில் சுவாரசியம் மிகுதியாக இருக்கும். அப்படியொரு மலையாளப் படம் தான் இந்த ‘மகா வீர்யர்’.
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, இயக்குநர் லால், ஷான்வி ஸ்ரீவத்சவா, சித்திக், மேஜர் ரவி முக்கிய வேடங்களில் இருக்கிறார்கள்.
மக்களாட்சி நடக்கும் இந்த காலத்தில் மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்த மன்னர் அமைச்சர் ஆகியோரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தினால்…அது தான் படம். அது தான் கலகலப்பு. அது தான் அட்டகாசம் இணைந்த சுவாரசியம்.
காட்சிகள் திரையில் வரும்போது உணரவேண்டும் அந்த பரவசத்தை.
படம் முழுக்க நீதிமன்ற அறைக்குள்ளேயே நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் உச்சபட்ச சிரிப்புக்கு உத்தரவாதம்.. அதிலும் மனைவிக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்கும் 24 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களாகக் கொடுப்பதும் அதன்பின் வரும் காட்சிகளும் சிரித்த சிரிப்பில் விலா எலும்பு வரை பதம் பார்த்து விடுகிறது.
சாமியாராக சாந்தமான முகத்துடன் நிவின்பாலி செய்யும் சாகசங்கள் அருமை. அவர் மீதான வழக்கில் அவர் வைக்கும் வாதங்கள் வாய் விட்டுச் சிரிப்போ சிரிப்பு. ரசிப்போ ரசிப்பு. (இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதும் அவரே)
மன்னராக வரும் லால், அமைச்சராக வரும் ஆஷிப் அலி, நீதிபதியாக வரும் சித்திக் அனுபவ நடிப்பில் திரையில் வியாபிக்கிறார்கள்.
அபலைப்பெண்ணாக வந்து அனைவரையும் கவர்கிறார் ஷான்வி ஸ்ரீவத்சவா. அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும்போதும் அனுதாபமே எழுவது அந்த கேரக்டரின் பலம்.மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான எம்.முகுந்தனின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நாட்டில் நடக்கும் பல்வேறு அட்டூழியங்களை கதைப்போக்கில் தோலுரித்து தொங்கப் போட்டு விடுகிறது.
இயக்குநர் அப்ரித் ஷைனி இன்றைய சமூக அவலத்தை சிரிக்க சிரிக்க சொல்லி சீரியசாக உணர வைத்ததில் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.
