பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் சென்னையில் பூஜையுடன் தொடக்க விழா

நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் இந்த புதிய படத்தை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எடிட்டர் செல்வா தொகுக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி எழுதுகிறார்கள்.
படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது, படக்குழு.
‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சர்பட்டா பரம்பரை’ என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை அளித்து, கவனம் ஈர்க்கும் இயக்குநரான பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதன்முறையாக சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால்.., இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
