0xygen-2 படவிமர்சனம்

கணவரை இழந்த பார்வதி, சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் 8 வயது மகன் வீராவுடன் வாழ்ந்து வருகிறார். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் உயிர் வாழும் சிறுவனின் ஆபரேஷனுக்காக ஆம்னி பஸ்சில் கோவையில் இருந்து கொச்சி செல்கிறார்.
அதே பஸ்சில், அப்பா-மகள், மகளின் காதலன், செய்யாத குற்றத்திற்காக 14 வருட சிறை தண்டனை அனுபவித்து விட்டு தனது தாயை பார்க்க ஊருக்கு திரும்பும் ஒருவர், உதவியாளருடன் செல்லும் முன்னாள் எம்.எல்.ஏ, போதைப் பொருளை கடத்திச் செல்லும் போலீஸ் அதிகாரி ஆகியோர் பயணம் செய்கிறார்கள். இந்த பயணத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு பஸ் மண்ணுக்குள் புதைந்து போக, பஸ்சில் மாட்டிக்கொண்டவர்கள் தப்பிக்க எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிய…
இந்நிலையில் பார்வதிக்கு போன் செய்யும் அவரது தம்பியும் பஸ்சை பாதி பயணத்தில் தவற விட்ட பயணி ஒருவரும் கொடுக்கும் தகவலின் பேரில் பஸ் பூமிக்குள் புதையுண்டது உறுதிப்படுத்தப்பட…தேசிய பேரிடர் பாதுகாப்பு படை பஸ் புதைந்திருக்கும் இடத்தை சல்லடை போட்டு தேடுகிறது. இதற்குள் தொடர் மழை வந்து அவர்கள் முயற்சிக்கு தடைபோட…
இந்த தாமத நேரத்தில் பஸ்சிற்குள் ஆக்சிஜன் அளவு குறையத் துவங்கி, அனைவரும் உயிருக்காக போராடுகிறார்கள். சிறுவன் வீராவிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள போலீஸ் அதிகாரி உள்ளிட்ட அனைவரும் முடிவுக்கு வர,அவர்களிடம் இருந்து நயன்தாரா தனது மகனை காப்பாற்ற போராடுகிறார். புதைந்த பஸ்சில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டார்களா? என்பது திகுதிகு திரைக்களம்.
பஸ் பயணம் தொடங்கும் இடத்தில் இருந்து வேகம் பிடிக்கும் திரைக்கதை கடைசி வரை திரில்லிங்குடன் பயணிப்பது சிறப்பு.
மகனை காப்பாற்ற போராடும் தாய் பார்வதியாக நயன்தாரா. கொஞ்சம் சுயநலமிக்க தாயாகவும் அந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். கதைப்படி படத்தின் நாயகன் வீராவாக வரும் அந்த சிறுவன் ரித்விக் தான். தாயை மரணம் நெருங்குகிறது என்பதை தெரிந்து கொண்ட நேரத்தில் ஆக்சிஜனை திறந்து விட்டு தன்னையும் மரணத்துக்கு தயார் செய்யும் அந்த இடம் நடிப்பும் துடிப்புமான இடம்.
போதைப்பொருளுடன் பயணிக்கும் போலீஸ் அதிகாரியாக பரத் நீலகண்டன் ஜீவ மரண போராட்டத்தில் துப்பாக்கி தூக்கும் இடம் பதட்டத்தின் உச்சம். ஜெயிலில் இருந்து விடுதலையாகி ஊருக்கு போய் தாய் முகம் பார்க்க ஆசைப்படும் ஹலோ கந்தசாமி பஸ்சுக்குள் உயிருக்குப் போராடும் இன்னொரு உணர்ச்சிகரமான பாத்திரம். அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் உயிர் பயத்தை கண்ணிலேயே காட்டி விடுகிறார். உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்ற நிலையிலும் மகளை காதலனுடன் பார்த்த அந்த அப்பாவின் ஆவேசமும் அடிதடி களமும் அந்த நிலையிலும விட்டுப்போகாத சாதிய வன்முறையை நெஞ்சில் அறைந்து சொல்கிறது.
‘சுவாசமே’ பாடல் விஷால் சந்திரசேகரின் இசையில் கவர, நிலச்சரிவை அபாய முனையில் காட்டி பயமுறுத்துகிறது தமிழழகனின் கேமரா. மகனை காப்பாற்ற மண்ணுக்குள் புதைந்த பஸ்சுக்குள் ஜீவமரணப் போராட்டம் நடத்தும் தாய்ப்பாசத்தையும் தாண்டி, இயற்கையை காக்க வேண்டிய அவசியத்தையும் கதையினூடே சொன்ன விதத்தில் தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி இருக்கிறார், ஜி.எஸ்.விக்னேஷ்.
