சினிமா செய்திகள்

10 முன்னணி நடிகைகள் கலந்து கொண்ட ‘தி லெஜண்ட்’ திரைப்பட திருவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலம்

சரவணா ஸ்டோர்சின் உரிமையாளர் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களில் தானே நடித்தார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நடிப்பின் மேல் ஆசை கொண்ட இவர், அஜித்-விக்ரம் நடிப்பில் ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜே.டி.ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்த படத்தில் ஊருக்கு நல்லது செய்யும் விஞ்ஞானி வேடத்தில் சரவணன் நடிக்கிறார். நாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிக்க, முக்கிய கேரக்டர்களில் பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. வேல்ராஜ் ஒளிப்பதிவு. நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த கடைசிப் படம் இது.
விரைவில் படம் வெளிவர இருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா, ராய்லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடினர்.
விழாவில் நடிகர் பிரபு பேசுகையில், ‘‘இந்த நேரத்தில் தம்பி விவேக்கை ரொம்ப மிஸ் பண்றோம். லெஜெண்ட் சரவணன், விவேக்கின் இறுதிச்சடங்கில் கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்து பார்த்துக்கிட்டாரு , கண்டிப்பா அவருடைய நல்ல மனசுக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். இந்த படத்திற்காக சரவணன், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தனது கடினமாக உழைப்பை கொடுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இறங்கி வேற லெவலில் இசையமைத்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.படத்தின் நாயகன் சரவணன் பேசுகையில், ‘‘லெஜெண்ட் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. காமெடி ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக கதையம்சம் நன்றாக இருக்கும். முடிந்த அளவிற்கு எங்களுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறோம்
படத்திற்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமாக செலவு செய்திருக்கிறோம் என்றால் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான். சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி சார் மற்றும் விஜய் சார் தான். இந்த படத்திற்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்’’ என்றார்.

தொடர்ந்து நடிகர்கள் விஜயகுமார், நாசர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரும் பேசினார்கள். படத்தில் கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் இடம் பிடித்து ரசிகர்களை கவர்ந்தன.