நரபலியை மையப்படுத்தி வரும் முதல் படம் ‘அந்த நாள்’ ‘ரிவைசிங் கமிட்டி’ வரை போய் சான்றிதழ் பெற்ற திகில் கதை

ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் நாயகனாக நடிக்கும் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி. இயக்கியிருக்கும் இப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. படம் தணிக்கைக் குழுவின் பார்வைக்குப் போனபோது படத்தில் பல காட்சிகளை மாற்றும்படி கூற, மேல்முறையீட்டுக்கு சென்று தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்யன் ஷாம், படம் குறித்து கூறியதாவது…
”நரபலியை மையப்படுத்தி அந்தநாள் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி காட்சிகளையும் மிரட்டலாகப் படமாக்கியுள்ளோம்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால், உங்கள் படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டியை அணுகினோம். அவர்கள் சொன்ன சில திருத்தங்களை செய்ததும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத ஒரு படமாக ‘அந்தநாள்’ இருக்கும்’’ என்றார்.
ஆர்யன் ஷாம் ‘அந்த நாள்’ படம் தவிர ‘பிரம்மாண்ட நாயகன்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடித்தது பற்றி அவர்கூறுகையில், ‘‘திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய படம் தான் ‘பிரம்மாண்ட நாயகன்’. அதில் நான் திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் என் நடிப்பையும் தோற்றத்தையும் பார்த்து திருப்பதி தேவஸ்தானம் வெகுவாகப் பாராட்டியது. அவர்கள் எனக்கு அளித்த பாராட்டுக் கடிதத்தில் ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. உடனே என்னை மிரட்டத் தொடங்கி விட்டார்கள். என்னை மட்டும் அல்ல, திருப்பதி தேவஸ்தானத்தையே தொடர்பு கொண்டு, ‘எப்படி நீங்கள் யூத் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கலாம்? என்று கேட்கிறார்களாம். அப்படிக் கேட்பவர் பெரிய ஆள் தான். ஆனால் அவர் யார் என்பதைச் சொல்ல விரும்பவில்லை. மொத்தத்தில் நான் சினிமாவில் வந்துவிடக் கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் தடைகளைத் தாண்டி திரைத்துறையில் வெற்றி பெறுவேன்” என்றார்.
இவர் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்திலேயே நாயகனாக நடிக்க வேண்டியது. அந்த படத்தின் தயாரிப்புக்காக ரூ. ஒரு கோடி முன் பணம் கொடுத்து காத்திருந்தார். ஆனால் கதை ரெடியானதும் மிஷ்கின் அந்த கதையில் இன்னொரு நடிகரை நடிக்க வைத்து விட்டார். அதேநேரம் இவர் அந்த படத்தில் நடிக்க இவர் முன்பணமாக கொடுத்த ரூ. ஒரு கோடியையும் திருப்பித் தரவில்லை.
அதுபற்றி ஆர்யன் ஷாம் கூறுகையில், ‘‘அந்தப் படத்தில் நான் இல்லை என்றதும் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டேன். உரிய பதில் இல்லை என்றதும் அது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன். இப்போது அந்தப் பணத்தை இயக்குநர் மிஷ்கின் கொடுத்து விட்டார். அதனால், அவர் மீது தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்று விட்டேன்.
அன்று அவர் பணம் கொடுக்கவில்லை என்பதை ஊடகங்கள் முன்னிலையில் கூறினேன். இப்போது அவர் பணம் கொடுத்து விட்டதையும் ஊடகங்கள் முன்பு சொல்ல வேண்டும் என்று மிஷ்கின் தரப்பில் கேட்டுக் கொண்டார்கள், அதனால், அதையும் உங்கள்முன்சொல்லி விடுகிறேன்.
மிஷ்கினுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, இப்போதும் அவருடன் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். தற்போது அவர் பிசியாக இருப்பதால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பேசலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், அவருடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு வந்தால் நிச்சயம் பண்ணுவேன்” என்றார்.
