இடியட் திிரை விமர்சனம்

சொத்துக்கு ஆசைப்பட்டு ஜமீ்ன்தார் குடும்பத்தை தீர்த்துக்கட்டி விடுகிறது ஒரு கூட்டம். தங்கள் பங்களாவில் அவர்களை பழிவாங்க காத்திருக்கிறது, ஜமீன்தார் குடும்பத்தின் ஆவிகள். இந்நிலையில் அந்த வீட்டுக்குள் சிக்கும் அப்பாவிகள், பேயை விரட்ட அதே பங்களாவுக்கு வரும் மந்திரவாதி என ஆவி பறக்க சொல்லப்பட்டிருக்கும் கதை. தில்லுக்குத் துட்டு படத்தின் முதல் இரண்டு பாகங்களிலும் பேய்களை அநியாயத்துக்கு கலாய்த்த ராம்பாலா, இந்த படத்திலும் இம்மி பிசகாமல் அதையே செய்திருக்கிறார்.
ஒரு சிறிய விபத்தில் சற்று மனநலம் பாதிக்கப்படும் மிர்சி சிவா, அவருக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் நிக்கி கல்ராணி மீது காதலாகிறார். இதேநேரம் பணத்துக்காக நிக்கி கல்ராணியை கடத்திப்போகிறார் ரவிமரியா. தன் காதலனை உயிர்ப்பிக்க நிக்கியின் உயிரை எடுப்பதற்காக அக்ஷரா கவுடா வருகிறார். இவர்கள் அனைவரும் அந்த ஆவி பங்களாவில் மாட்டிக் கொள்கிறார்கள். எதிரிகளிடம் இருந்தும் ஆவிகளிடம் இருந்தும் நிக்கி கல்ராணி காப்பாற்றப்பட்டாரா? அவரது பின்னணி என்ன? காதல் என்னாகிறது என்பது கலகல காமெடி கிளைமாக்ஸ்.
சிவா சும்மாவே சிரிக்க வைப்பார். இதிலும் அதிரடி சிக்சர் சிரிப்பு. கபடி போட்டியின்போது எதிர் அணியினரை கைகுலுக்கி அவுட் செய்வதில் தொடங்கி கிளைமாக்ஸில் பெண் மந்திரவாதியிடம் காமெடியாக பைட் செய்வது வரை கொடி கட்டிப் பறக்கிறது, அவரது காமெடி சாம்ராஜ்யம். காதலியை கடத்தி வைத்துக் கொண்டு பேரம் பேசும் ரவிமரியாவிடம் 8 ஆயிரம் கோடி தருவதாக சிவா கூற, அதைக்கேட்டு ரவிமரியா தலைசுற்றி கீழேவிழுவது அரங்கு அதிரும் காமெடி.
போதாக்குறைக்கு ஆனந்தராஜ், ஊர்வசி, சிங்கமுத்து, மயில்சாமி, கிங்ஸ்லி, சிவசங்கர் குடும்பம் என்று ஆளாளுக்கு சிரிக்க வைக்கும் பணியை செவ்வனே செய்து விட்டுப் போகிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசர்ஜியும் இசை தந்த விக்ரம்செல்வாவும் இந்த ஆவிப்படத்தின் அசத்தல் கூட்டணி. 2 மணி நேர சிரிப்புக்கு கியாரண்டி வழங்கிய ராம்பாலா இம்முறையும் இயக்கத்தில் ஜெயித்திருக்கிறார்.
