சினிமா செய்திகள்

கணவர் பிறந்த நாளில் மனைவி தொடங்கிய ‘யூ டியூப்’ சேனல்

வினியோகஸ்தராக தன் கலை வாழ்வைத் தொடங்கிய ராஜ்கிரணை ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா நடிகராகவும் வாரியணைத்துக் கொண்டது. நடிப்பில் தனக்கான களத்தை அவர் சரியாக தேர்ந்தெடுத்துக் கொண்டதில் தான் பேசப்பட்டார். புகழப்பட்டார். அதிரடியில் இடி, குணசித்ரத்தில் கோபுரம், பாசத்தில் அதுவும் கிராமிய பாசத்தில் உச்சம் என எதையும் மிச்சம் மீதி வைக்காமல் முழுமையான நடிப்பில் திரைஆளுமை செய்தவர். கொஞ்சம் இடைவெளியை அவராக ஏற்படுத்திக் கொண்டால் கூட இப்போதும் சினிமாவில் அவருக்கான இடம் அப்படியே இருக்கிறது என்பது இவரது போட்டியாளர்களுக்கும் கூட இதுவரை புதிரான விஷயம் தான்.

நடிப்பில் ‘என்னப் பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே. அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி, பாண்டவர் பூமி, நந்தா என ஏற்றுக் கொண்ட பாத்திரங்கள் எல்லாவற்றுக்குமே நடிப்பால் கம்பீரம் சேர்த்தார். ‘அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான்’ படங்களை நடிப்போடு இயக்கவும் செய்தார்.

இப்போது வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக வெற்றி உலா வரும் ராஜ்கிரண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது மனைவி ‘திருமதி ராஜ்கிரண்’ என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது கணவருக்கான பிறந்த நாள் பரிசு என்றாலும், ரசிகர்களுக்கு இதன்மூலம் வாயில் வந்து தேனாக கொட்ட இருக்கிறது ராஜ்கிரண் தொடர்பான செய்திகள்.

நடக்கட்டும் கொண்டாட்டம். நடத்தட்டும் நடிப்பு ராஜாங்கம்.