சினிமாவாக எடுக்க இருந்து இணைய தொடரான ‘விலங்கு’ விமல்- இனியா நடிக்க பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வருகிற 18-ந்தேதி முதல் வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர்.
7 எபிஸோடுகளை கொண்ட இந்த இணை தொடர், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, திருச்சிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதி என்ற பாத்திரத்தில் விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார்.
தொடர் ஒளிபரப்பாவதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network, பேசியதாவது…
ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் தயாரிப்புக்கும் வந்துள்ளோம். இதைத் தொடர்ந்து இன்னும் நிறைய தொடர்கள் செய்ய நினைத்துள்ளோம். நான் இந்த சீரிஸை பார்த்து விட்டேன். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும், வயலன்ஸ், செக்ஸை தாண்டி வேறொரு பாணியில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும். தயாரிப்பாளர் மதன், தொடரில் நடித்த விமல், இனியா, பாலசரவணன், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி.
கௌசிக் நரசிம்மன், VP Content, ZEE5 Tamil பேசியதாவது….
ரொம்ப பெருமையாக இருக்கிறது, விலங்கு தொடர் மிகப்பெரிய பயணம், பிரசாந்த் கதை சொன்ன இடத்திலிருந்து இன்று உங்கள் முன் வந்ததுள்ளது பெருமை. விமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள், பாலசரவணன் சூப்பராக நடித்துள்ளார். அனைவரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். பிரசாந்த் நன்றாக இயக்கியுள்ளார். தொடர்ந்து ஜீ5ல் நல்ல கதைகள் வரும், ஆதரவு தாருங்கள் நன்றி.
ஜீ5 சார்பில் லாயிட் பேசியதாவது…
ஜீ5 ல் எங்கள் படைப்புகளுக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி. நாங்கள் விலங்கு மூலம் மீண்டும் ஒரு நல்ல குழுவுடன், நல்ல படைப்புடன் வந்துள்ளோம். இந்த விலங்கு தொடர் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் பேசியதாவது…
நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு இது கம்பேக். 3 வருடங்களுக்கு முன் ஆபீஸில் நான் தனியாக இருந்தபோது, ஐயப்பனை அழைத்தேன், அவர் தான் பிரசாந்த்தை கூட்டி வந்தார். அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. திருச்சியிலேயே ஷூட்டிங் எடுத்துள்ளோம். தொடர் பார்க்கும் போது அதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். பிரசாந்த் ஒரு நல்ல இயக்குநர். நாங்கள் சேர்ந்து படம் செய்தாலும் இல்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
நடிகர் விமல் அவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன், என் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஜீ5 எனக்கு கிடைத்தது எனக்கு வரம், சிஜு இந்த தொடரில் காட்டிய அக்கறை மிகப்பெரியது. பாலசரவணனை வேறொரு கோணத்தில் இதில் பார்க்கலாம். கணேஷ் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு அட்டகாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஐயப்பன் பேசியதாவது…
இது முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க் தான். இந்த டீமில் கொரானா தொற்றால் RNR மனோகர் சாரும், தீபக்கும் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் இருவரின் ஆசி கண்டிப்பாக இந்த தொடருக்கு இருக்கும். இந்ததொடர் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.
நடிகர் பாலசரவணன்
நான் இதுவரை நடித்த கேரக்டர்களில் விலங்கு தொடர் முக்கியமானது. பிரசாந்த் என் உயிர் நண்பன். அந்த உரிமையில் அவரிடம், ‘இதுவரை காமெடி கேரக்டர்களில் தான் நடிக்கிறேன், உன் கதையில் குணசித்திரத்தில் நடிக்க வேண்டும்’ என சொன்னேன். அப்போது தான் இந்தக் கதையை சொல்லி இதில் வரும் குணசித்ர கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய அநத கேரக்டரை என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி. அதற்கு ஒத்துழைப்பு தந்த தயாரிப்பாளர் மதன் சாருக்கு நன்றி. இந்த தொடரில் எனக்கு ஒரு உறவு கிடைத்துள்ளது. அது விமல் அண்ணன் அவருக்கு நன்றி. இ்ந்த இணைய தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.’’
இசையமைப்பாளர் அஜீஷ் பேசியதாவது…
டைரக்டர் பிரசாந்த் என்ன வேண்டுமோ அதை சரியாக சொல்லி வாங்கி விடுவார். விமல் அண்ணா சூப்பராக நடித்துள்ளார். பாலசரவணன் இதில் வித்தியாசமாக நடித்துள்ளார் கண்டிப்பாக பெரிதாக பேசப்படுவார். இந்த டீம் ரொம்ப வலுவான டீம். எல்லோரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். நாங்கள் விரும்பி உழைத்த தொடர் விலங்கு, உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.’’
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது…
புரூஸ்லி படத்துக்கு பிறகு 4 வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கதையை முதலில் ஐயப்பன் அண்ணன் தான் கேட்டார். வேறொரு கதைக்காக போலீஸ் பற்றி விசாரித்து அவர்களை சந்தித்த போது அவர்கள் சொன்னதை கதையாக எடுக்கலாம் என தோன்றியது. முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்து விட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் சென்னையில் எடுங்கள் என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் அங்கு தான் எடுக்க வேண்டும் என்றார். அந்த அளவு கதையை நம்பினார். அவருக்கு நன்றி. விமல் அண்ணாவுக்கு நான் முதலில் சொன்ன கதை பிடிக்கவில்லை. ஆனால் இந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடிப்பார். முழுக்க முழுக்க சப்-இன்ஸ்பெக்டர் பரிதியாகவே மாறி விட்டார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்.
நடிகை இனியா பேசியதாவது…
இது எனது முதல் வெப் தொடர் அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. விலங்கு தொடர் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் விமல் பேசியதாவது….
இந்தக் கதையை முதலில் சினிமாவாகத்தான் எடுக்க இருந்தார்கள். ஆனால் கதை பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் புதிதாக இருந்தது. நான் ஹீரோ. ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் மதன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார், ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார். எல்லோரும் இணைந்து எங்கள அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம். எங்களை நம்பி ஜீ5 இதை எடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக இந்த தொடர் இருக்கும் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.
