‘‘புதிய கதைகளுக்கு ‘ஆஹா’ முக்கியமான தளமாக இருக்கும்’’ தமிழில் தடம் பதிக்கும் ஒடிடி நிறுவனத்துக்கு நடிகை குஷ்பு வாழ்த்து

தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமான ஆஹா நிறுவனம், அடுத்த கட்டமாக ஓடிடி தளத்தில் கால் பதித்துள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், ‘‘அல்லு அரவிந்த் அவர்களை மீண்டும் ஆஹா மூலம் தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. 30 வருடங்களுக்கு மேலாக, ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’ பட காலம் முதல் அல்லு அரவிந்த் அவர்களுடன் எனக்கு நட்பு உள்ளது. அவரது குணமும் நேர்மையும் மெச்சத்தக்கது. அவரது கணக்குகள் என்றுமே தப்பாக போனதில்லை. இந்த புதிய பயணம் அவருக்கு பெரும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.” என்றார்.
ஆஹா நிறுவன ஸ்தாபகர் அல்லு அர்விந்த் பேசுகையில், “20 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் தான் இருந்தேன். இங்கே தான் படித்தேன் இங்கே தான் வாழ்ந்தேன், இப்போது மீண்டும் வீட்டுக்கு திரும்பிய உணர்வு இருக்கிறது. 23 வயதிலேயே தயாரிப்பாளர் ஆகி விட்டேன். இந்த வெற்றிப் பயணம் உங்களால் நடந்தது. ஒரு நாள் இரவு 2 மணி வரை நெட்பிளிக்ஸில் ஒரு தொடர் பார்த்தேன் என்னை உள்ளே அப்படியே இழுத்துக்கொண்டது. எழுந்து ரூமை விட்டு வந்தால், மகன் அல்லு அர்ஜூனும் நெட்பிளிக்ஸ் பார்த்துவிட்டு உலாவிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஈர்க்கும் சக்தி, இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு இருக்கிறது என தெரிந்தது. அப்போது தான் இந்த தளத்தை ஆரம்பிக்கும் ஐடியா வந்தது. இந்த தளம் அனைவரையும் ஈர்க்குமென நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசுகையில், “அல்லு அர்விந்த் எதைத் தொட்டாலும் பொன்னாகும். அவர் எதில் கை வைத்தாலும் அதில் லாபம் பார்த்து விடுவார் இந்த புதிய துறையிலும் அவர் வெற்றி பெறுவார்” என்றார்.
கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “ஓடிடி தளம் என்பது சிறு தயாரிப்பாளர்களுக்கு வரம். அல்லு அரவிந்த் எல்லா விசயத்திலும் கணக்கு போட்டு ஜெயிப்பார். இந்த ஆஹா ஓடிடி பயணமும் அவருக்கு வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குனருமான ரஞ்சித் பேசியதாவது, “இது மிக அருமையான தருணம். ரைட்டர் படத்தை தமிழில் கால் பதிக்கும் ‘ஆஹா’வை மிகப்பெரிய வெளியீடாக அனைவருக்கும் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி. சிறு படங்களுக்கான தியேட்டர் ரிலீஸ் இங்கு சிக்கலாக உள்ளது. இப்போது ஓ.டி.டி. தளங்களும் சிறு பட்ஜெட் படங்களை வாங்குவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. தமிழில் வரும் ஆஹா நிறுவனம் சிறு படங்களுக்கு ஆதரவு தருமென நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, “தமிழை மட்டுமே நோக்கமாக கொண்டு ஒரு ஓடிடி தளமாக ஆஹா வந்திருப்பது மகிழ்ச்சி. நிறைய ஓடிடி தளங்கள் வந்தபின் எதைப்பார்ப்பது என்பதில் நிறைய தடுமாற்றங்கள் வந்துள்ளது. அதை தீர்க்கும் விதமாக ஆஹா இருக்குமென நம்புகிறேன். அல்லு சாரை எனது சிறு வயதில் இருந்து தெரியும் அவர் மெட்ராஸ் பாய். அவர் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “ஆஹா உடன் எனக்கு ஒரு சிறு தொடர்பு விரைவில் உருவாகவுள்ளது. அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். ஆஹா குடும்பத்துடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி ஆஹா மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது. “தமிழில் ஆஹா நிறுவனத்தை ஆரம்பிக்கும் அல்லு அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது ஓடிடி பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லு அரவிந்த் அவர் இருக்கும் உயரத்திற்கு, அவர் சிரஞ்சீவியை வைத்து படம் செய்த போது கதை விஷயத்தில் குழப்பம் எற்பட்டபோது என்னிடம் ‘இந்தக் கதையை கேட்டு கொஞ்சம் ஓகேவா என சொல்லுங்கள்’ என்றார். அத்தனை எளிமையானவர், ஈகோ இல்லாத மனிதர். அவர் ஆரம்பித்திருக்கும் ஆஹா இங்கும் மிகப்பெரிய வெற்றியை பெறும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை குஷ்பு பேசியதாவது, “நாங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த போது அல்லு அர்விந்த் சாரை தான் ரோல் மாடலாக வைத்துக்கொண்டோம். ஒரு படம் ஆரம்பிக்கும் போதே, அது எவ்வளவு சம்பாதிக்குமென திட்டமிடுவார். அவர் 29 வருடத்திற்கு பின் தமிழுக்கு வந்ததாக சொன்னார். தமிழ் மண்ணுக்கு உள்ள குணம் அப்படி. இங்கிருந்து எங்கு போனாலும் மீண்டும் அழைத்து வந்துவிடும். ஓடிடி தான் உலகம் முழுக்க இன்று கோலோச்சி கொண்டிருக்கிறது. ஓடிடி புதிய கதைகளுக்கான தளமாக இருக்கிறது. தமிழில் ஆஹா முக்கியமான தளமாக இருக்கும். அல்லு அர்விந்த் எப்போதும் மாறாமல் அப்படியே எளிமையாக இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குனர் சிறுத்தை சிவா பேசியதாவது, “அல்லு அர்விந்த் சார் மிகப்பெரிய பெர்பக்ஷனிஸ்ட் அவரது உழைப்பு எனக்கு தெரியும். அவர் ஆரம்பித்திருக்கும் ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசியதாவது, “ஆஹா 100 சதவீதம் தமிழில் வெற்றி அடையும். தமிழ் துறையை வளர்க்க அல்லு அரவிந்த் சார் பெரிய அளவில் முன்னெடுப்பது மகிழ்ச்சி. நாங்கள் ‘இரை’ எனும் வெப் தொடரை சமூக கருத்துடன் எடுத்துள்ளோம். கமல் சார் வாழ்த்தினார். ராஜேஷ் மிக நன்றாக இயக்கியுள்ளார். இது அனைவரையும் ஈர்க்கும் படைப்பாக இருக்கும்” என்றார்.
நடிகை ராதிகா பேசியதாவது. “இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு இதை அனைத்து மொழிகளிலும் முன்னெடுக்க உள்ளீர்கள் என தெரியும், அனைத்திலும் இது மிகப்பெரும் வெற்றி பெறும். இதில் நாங்கள் ஒரு வெப் தொடர் எடுத்துள்ளோம். ‘பேட்ஸ் ஆஃப் பிரே’ நாவலை தழுவி எடுத்திருக்கிறோம். இந்தக்கதையை கேட்டவுடன் அவர் இதை செய்யலாம் என சொன்னார். இதில் வேலை செய்த என் ஹீரோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது, “ஓடிடியை ஒரு வருடம் முன்பு சினிமாவுக்கு போட்டி என சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது எல்லோரும் அங்கு தான் செல்கிறார்கள். தமிழ் திரையுலகில் நிறைய இளம் திறமையாளர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஆஹா வாய்ப்பு தர வேண்டும்” என்றார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, “அல்லு அர்விந்த் சார் அவருடன் வேலை செய்பவர்களை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்வார். கலைக்காக அவர் தரும் மரியாதையையும், உழைப்பும் பெரிது. தமிழில் இன்று வரும் படங்கள் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் நம்பித் தான் இருக்கிறது அந்த வகையில் புதிதாக அறிமுகம் ஆகும் ஆஹா பெரிய வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி பேசியதாவது, “எங்கள் ரமணி Vs ரமணி நிகழ்ச்சி மீண்டும் ஆஹா மூலம் வருவது மகிழ்ச்சி. இந்த லாக்டவுனில் எல்லோரும் சோகமாக இருந்த போது ரமணி Vs ரமணி தொடரை இணையத்தில் வெளியிட, அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது தான் இதை மீண்டும் உருவாக்கலாம் என தோன்றியது. தமிழுக்கு புதிதாக வந்திருக்கும் ஆஹா பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது, “அல்லு அரவிந்த் சார் இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கேற்றவாறு நவீனமாக இருக்கிறார். நாங்கள் ஆஹாவில் ஒரு ஷோ செய்துள்ளோம். இப்போது தான் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியாவில் ஆஹா மட்டுமே மொழி சார்ந்து இயங்கும் தளமாக இருக்கிறது. ஆஹா வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
விழாவில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ஆஹா தளத்தின் லோகோவை அறிமுகம் செய்தனர். மேலும், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தை ஆஹா வெளியிட உள்ளதாக அல்லு அரவிந்த் அறிவித்தது சிறப்புத் தகவல்.
