பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani
மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது
ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனைய 15 மொழிகளில் உரையாடல் குறிப்புகளுடன் ( Subtitles) ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடர்… இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
இந்த இணையத் தொடரின் முதல் பாகமான வதந்தி,: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ – Vadhandhi: The Fable of Velonie – சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட தொடர் வகைகளில் தனக்கென பிரத்யேகமான இடத்தை பிடித்திருந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக புதிய வழக்கு- எம். சசிகுமார் தலைமையிலான புதிய நடிகர்கள் குழு- இந்த தொடருக்கே உரித்தான ஆழமான… கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை சொல்லல் பாணி- என பல அம்சங்களுடன் இரண்டாம் பாகம் உருவானது.
கலாச்சார சிறப்புமிக்க மதுரையை பின்னணியாகக் கொண்ட இக்கதை… பாரம்பரியம்- புலனாய்வு -ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பான ஆற்றல்- ஆகியவற்றை தனித்தன்மையுடன் இணைக்கிறது.
‘வதந்திக்கும், உண்மைக்கும் இடையிலான முரண் ‘ என்ற இத்தொடரின் மையக் கருப்பொருளை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உருவான இரண்டாம் பாகம் பார்வையாளர்களை ஒரு விறுவிறுப்பான மர்ம உலகத்திற்குள் ஈர்க்கிறது. இதற்கு விரிவான விசாலமான கதை சொல்லல்- சிக்கலான கதாபாத்திரங்கள்- உணர்ச்சி பூர்வமான உறவுகள்- ஆகியவை சிறப்பம்சங்களாக அமைகின்றன.
இந்த இணையத் தொடரில் சசிகுமார் நேர்மையான மற்றும் தளராத நம்பிக்கை கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசாவாக நடித்துள்ளார். உண்மையைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சியானது… அரசியல் மற்றும் ஊடகங்களின் பரப்பரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதுகிறது.
நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தொடக்கத்தின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் விசாரணை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. இது அவரை ‘மணி’ என்ற பிடிப்படாத கைதியை நோக்கி பயணப்பட வைக்கிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ( Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில் படைப்பாளிகள் புஷ்கர் – காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இருந்து தயாரித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எம். சசிகுமார், முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உலகெங்கிலும் ஒளிபரப்பாகும் இந்தி, ஆங்கிலம், கொரிய மொழி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி, சசிகுமாரின் ‘வதந்தி : சீசன் 2 தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடர் – சாதனை படைத்துள்ள தமிழ் தொடர் என்பதும், பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் ‘ஒரிஜினல் சீரிஸ்’ என்ற வகையில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணைய தொடர் வகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

