சினி நிகழ்வுகள்

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் இளையராஜா, “தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

எடிட்டர் ராம் கோபி, ” வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்”.

பாடலாசிரியர் ஜெயந்தி, ” இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

கலை இயக்குநர் சம்பத் திலக், “வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”.

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, “இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்”.

நடன இயக்குநர் தினேஷ், “பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, “வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி”

இயக்குநர் ராஜா பத்மநாபன், ” வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சரண், “சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய ‘அமர்க்களம்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் “.

இயக்குநர் பேரரசு, “பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக ‘சிவகாசி’ படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். ‘கோடம்பாக்கம் ஏரியா…’ பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர். நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்” என்றார்.

இயக்குநர் எழில், “படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம். இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் பலராம் ஜெ பாலாஜி, “கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.