Category: திரை விமர்சனம்

விமர்சனம்

  • என் காதலே  – திரை விமர்சனம்

    என் காதலே – திரை விமர்சனம்

    சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத்து தலைவர் ( மதுசூதனன் ) தப்பி பிழைத்த தங்கையின் மகனை தன் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார். அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் நேரத்தில் தலைவரின் மகளுக்கு (திவ்யா) அவன்( லிங்கேஷ்) மீது காதல். அவனுக்கோ அப்படி ஒரு சிந்தனையே இல்லை. ஆனாலும் சிறு வயது முதல் அவன் காட்டி வந்த அன்பை மாமா மகள் தவறாக புரிந்து கொள்வதாலேயே அவளுக்குள் மாமா மனதளவில் மணாளன் ஆகிப் போகிறான்.

    இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழ்க் கலாசாரம் கற்க வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ( லியா) அவனுக்கும் காதல் வர…மாமனே உலகம் என்று வாழும் திவ்யாவுக்கு இது தெரிய வர… விஷயம் அவள் அப்பா வரை போக….கொந்தளிக்கும் தலைவர் அந்தப் பெண்ணை உடனே ஊரை காலி பண்ண சொல்கிறார்.

    இப்போது நாயகனின் நிலை என்ன? நெருக்கமான காதலில் வயிற்றில் கருவை தாங்கி நிற்கும் அந்த வெள்ளைக்கார பெண்ணின் நிலை என்ன? என்பது தவிப்பும் துடிப்புமான கிளைமாக்ஸ். நாயகனாக வரும் லிங்கேஷ் தனக்குள் ஒரு எல்லைக்கோடு வைத்து நடித்திருக்கிறார்.மாமா மகளை தன்மீது அன்பு காட்டும் தாய் ஸ்தானத்தில் தான் வைத்து பார்த்தேன் என்று நாயகன் சொல்லும் இடத்தில் லிங்கேஷ் அந்த கேரக்டரை நம் மனதுக்குள் பதித்து விடுகிறார்.

    மாமா கிடைக்காத இயக்கத்தில் சாமியிடம் முறையிடும் நாயகிக்கு பூசாரி விளக்கம் தரும் இடத்தில் நாயகியாக வரும் திவ்யாவின் ரியாக்ஷன் நடிப்பில் தேர்ந்த நடிகைக்கான அடையாளம்.குப்பத்து தலைவராக மதுசூதனன் கிளைமாக்சி ல் தனக்குள் இருக்கும் புது மனிதனை வெளிக்கொண்டுவரும் இடம் அத்தனை அழகு.வெள்ளைக்கார பெண்ணாக வந்து மனதை தொட்டு போகிறார் லியா. தன் காதலனுக்கு சொந்தத்திலேயே மணமகள் இருக்கிறா ள் என்பதை அறிந்து உடைந்து நொறுங்கும் இடத்தில் அந்த அமைதியான பார்வையிலேயே அதிர்ச்சியை கடத்தி விடுகிறார்.

    சாண்டி சாண்டேல்லா இசையில் பாடல்கள் இனிமை. டோனி ஜான் ஒளிப்பதிவு அந்த மீனவ கிராமத்தை அழகுற படம் பிடித்து காட்டி இருக்கிறது.மாறன் , கஞ்சா கருப்பு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

    சிறுவயது முதல் தூக்கி வளர்த்த பிள்ளையை மனைவியாகப் பார்க்க முடியாத நாயகன் என்ற ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் விளையாட்டை விளையாடி இருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.

  • ஹிட் தி தேர்ட் கேஸ் – திரை விமர்சனம்

    ஹிட் தி தேர்ட் கேஸ் – திரை விமர்சனம்

    கொலை வழக்கு ஒன்றை விசாரிக்கும் காவல்துறை எஸ். பி. நானிக்கு, ஒரே பாணியில் காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்க அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக காஷ்மீர் பயணப்படுகிறார்.

    அங்கே விசாரணை தொடங்கிய போது தான் இதற்கென கொடூர கறு ப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. அந்த கறுப்பு உலக மனிதர்கள் யார்? எதற்காக இப்படி கொடூர கொலைகளை செய்து வருகிறார்கள்? இந்தக் கேள்வி,விடை இல்லாமல் கேள்வியாகவே நிற்க…இதை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த கொடூர உலக மனிதர்கள் கூட்டத்தில் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் நோக்கம் தெரிய வரும்.ஆனால் அங்கே சேர்வது அத்தனை எளிதில்லை. மாட்டிக் கொண்டால் அப்போதே கொடூர மரணம் நிச்சயம்.
    இது தெரிந்தும் உயிரை பணயம் வைத்து அவர்கள் நம்பிக்கை பெற்று அந்தக் கூட்டத்தில் ஒருவன் ஆகிறார் நானி.

    ஒரு கட்டத்தில் நானி அவர்களை வேட்டையாட வந்த போலீஸ் அதிகாரி என்பது அந்த கொடூர கூட்டத்துக்கு தெரிய வர…இப்போது வலையில் சிக்கிய சிங்கம் போல் நானி. உயிர் தப்பினாரா? அல்லது அந்தக் கூட்டத்தை களை எடுத்தாரா? என்பதை ஆயுதங்களின் பாய்ச்சலோடு சொல்லி இருக்கும் படம்.

    காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக நானி கம்பீரம் காட்டுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டியுடனான முதல் சந்திப்பில் நிஜமாகவே காதல் பொங்குகிறது. காதலியும் போலீஸ் தான் என்பதை பின்னாளில் தெரிந்து கொள்ளும்போது நானி முகத்தை பார்க்க வேண்டுமே, அடடா அடடா… சண்டைக்காட்சிகளில் வன்முறை அதிகம். ரத்தமும் அதிகம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரநிதி ஷெட்டி நானி யி டம் காதல் சொல்லும் இடம் கவிதை. துடிப்பான போலீஸ் அதிகாரியாக இன்னொரு முகமும் காட்டி ரசிக்க வைக்கிறார்

    சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா கதையின் கிளை பாத்திரங்களில் வந்து ஜொலிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் கண்கள் திணற திணற காஷ்மீரின் அழகை கொட்டித் தந்திருக்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை அதிரடிக்கேற்ற அதிரடி. எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கோலானு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, புதிய கதைக் களத்தில் சூடு குறையாமல் இயக்கி படத்தின் தலைப்பை உறுதி செய்திருக்கிறார்.
    அதிரடி மேளா.

  • டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்

    டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்

    இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ஏற்கனவே அங்கே கடன் சுமை, அதோடு உச்சபட்ச விலைவாசி இரண்டும் அந்தக் குடும்பத்தை வாட்டி எடுத்த நிலையில் தமிழகத்துக்கு பிழைக்க வருகிறது அந்த குடும்பம்.

    அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ… இலங்கையில் இருந்து வந்த தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க…
    அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.
    இலங்கை குடும்பத்தின் தந்தையாக சசிகுமார், தாயாக சிம்ரன், மகன்களாக மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ். இந்தப் பொருத்தமான பாத்திரத் தேர்வே தொடக்கம் முதலே படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

    அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான சின்ன சின்ன மோதல்கள் கதை ஓட்டத்தை டெம்போ குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அதிலும் மகன் தன் காதல் பிளாஷ் பேக்கை தந்தையிடம் சொல்லும் இடத்திலும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் படம் சுவாரசியமாகி விடுகிறது.
    ,சமயம் பார்த்து கதையை திருப்புவது, அவ்வப்போது காமெடித் தோரணம் இதெல்லாம் இளைய மகன் கமலேஷின் கலகல பக்கங்களாகி விடுகிறது.

    சிம்ரனின் அண்ணனாக யோகி பாபு தன் தங்கையிடம், இந்தக் குடியிருப்பில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாதே என்று சொன்ன அடுத்த கணமே குடியிருப்பு பெண்கள் கூட்டமாக சிம்ரனை தேடி வர, அதிர்ச்சியில் தங்கையை பார்த்து,’என்ன சிம்ரன் இதெல்லாம்?’ என்று வடிவேலு கேட்கும் இடத்தில் அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகிறது. இன்ஸ்பெக்டர் ராகவனாக பகவதி பெருமாள், ஏட்டாக ரமேஷ் திலக் தங்கள் பாத்திரத்தில் பளிச்.
    பகவதி பெருமாள் மகளாக வரும் யோகலக்ஷ்மி, தனது மெச்சூரிட்டி பற்றி மிதுனிடம் பேசும் இடத்தில் அரங்கில் சிரிப்பு சில்லறையாய் சிதறு கிறது.

    குடும்ப பஞ்சாயத்தில் அம்மா சிம்ரனின் பாதி நேரம் போய் விடுகிறது. என்றாலும் குடியிருப்பு கொண்டாட்டத் தின் போது சிம்ரனின் சின்ன நடன அசைவுக்கே தியேட்டர் தெறிக்கிறது.மூத்த காதல் தம்பதிகளாக வரும் இளங்கோ குமரவேல் – ஸ்ரீஜா ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் காதல் எப்போதுமே இளமையானது தான் என்பதை உணர வைக்கின்றன. சசிகுமாருக்கு மீண்டும் வேலை கொடுக்கும் எம்.எஸ். பாஸ்கர் அதற்கு சொல்லும் காரணம் மகத்தானது. சசிகுமாரை கொலை வெறியுடன் தேடும் அந்த வடக்கத்திய இன்ஸ்பெக்டர் பார்வையிலேயே பயமுறுத்தி விடுகிறார்.

    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சுகமாகவும் பின்னணி இசை காட்சிகளின் உயி ரோட்டமாகவும் அமைந்து படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடு கிறது. நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள் மீது அன்பை விதைக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் காட்சிகளை இயக்கிய விதத்தில் வர் இயக்குனர் அபிஷன் ஜீவிந் படம் நெடுக மனிதநேயத்தை தூவி விட்டிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் தான் படத்தின் ஜீவன் என்பதை உணர்ந்து அங்கேயும் சிக்ஸர் அடித்து விடுகிறார்.

    இந்த டூரிஸ்ட் பேமிலி இனிய பயணம்.

  • சுமோ – திரை விமர்சனம்

    சுமோ – திரை விமர்சனம்

    சிவா அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் அந்த விளையாட்டில் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர் சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே அலைச்சறுக்கு விளையாட்டையும் தொடர்கிறார்.
    இப்படி ஒரு நாள் அலைச்சறுக்கு விளையாட்டுக்காக கடற்கரை வருபவர் அங்கே கரையோரம் ஓங்குதாங்கான ஒருவர் மயக்க நிலையில் இருப்பதை காண்கிறார். அவரைக் கண் விழிக்க வைத்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். பழசு எல்லாம் மறந்து போன அந்த நபரும் தற்போது குழந்தையின் மனநிலையில் இருக்கிறார்.
    இந்நிலையில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டவர் ஜப்பானில் உள்ள பிரபல சுமோ
    மல்யுத்த வீரர் என்பது தெரிய வர, சிவா அவரை அழைத்துக் கொண்டு ஜப்பான் போகிறார்.
    அங்கே போன பிறகுதான் அந்த சுமோ மல்யுத்த வீரர் அவரது எதிரிகளால் நாடு கடத்தப்பட்டவர் என்பது தெரிய வர…
    இதற்கிடையே மருத்துவ சிகிச்சை மூலம் சுமோ வீரர் மீண்டும் பழைய நிலைக்கு வர, எதிரிகளின் சூழ்ச்சிகளை தாண்டி அவரை சுமோ மல்யுத்த போட்டியில் பங்கேற்க வைக்கிறார் சிவா.

    தடைகளை உடைத்து சுமோ போட்டியில் வென்றாரா என்பது கதை.
    சுமோவின் நண்பனாக சிவா அந்த கேரக்டருக்கு பாந்தமாக பொருந்துகிறார் இவருக்கும் நாயகி பிரியா ஆனந்துக்குமான காதல் அழகான காதல் கவிதை.
    நாயகியாக வரும் பிரியா ஆனந்த் கொஞ்ச காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைந்து போகிறார்.
    சுமோவாக நடித்திருக்கும் யோஷினோரி தாஷிரோ முதல் பாதியில் அந்த அப்பாவித்தன முகத்தை வைத்துக்கொண்டு லாலிபாப் சாப்பிடுவது தனி அழகு. பிற்பகுதியில் சுமோ மல்யுத்த வீரராக களம் இறங்கும் காட்சிகளில் அந்த உடல் மொழியும் நடிப்பும் வேறு லெவல்.
    போட்டி முடிந்ததும் மல்யுத்த மேடையில் சிவாவை அழைத்து நன்றி பாராட்டும் காட்சியில், ச்சும்மா அதிருதில்ல திரையரங்கம்.
    சிவாவின் நண்பராக வரும் விடிவி கணேஷ் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

    பிரியா ஆனந்த் மீது திடீர் காதலாகி பெண் கேட்டு வரும் யோகி பாபு சிரிப்புக்கு பதில் கடுப்ஸ் ஏற்றுகிறார் நிழல்கள் ரவி, சேத்தன், சதீஷ் சுரேஷ் சக்ரவர்த்தி தங்கள் கேரக்டர்களுக்கு நடிப்பில் நியாயம் செய்கிறார்கள்.
    நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் தாளமிட வைக்கின்றன. ராஜீவ் மேனனின் கேமரா ஜப்பானை சுற்றி சுழன்றதில் கண்கள் பெற்றது அமுத விருந்து.
    எஸ்.பி.ஹோசி மின் இயக்கியிருக்கிறார் சுமோ மல்யுத்த வீரரின் பின்னணியில் கதை நகர்ந்தாலும் , அந்த வீரருக்கான பின்னணி கதையில் இன்னும் கூடுதலான ஆழம் இருந்திருக்கலாம்.
    என்றாலும் சுமோ சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளின் கொண்டாட்டமாகி விடுகிறது.

  • வல்லமை  – திரை விமர்சனம்

    வல்லமை – திரை விமர்சனம்

    பாதிக்கப்பட்டவர்கள் போதிக்கும் புதிய பாடம். மகளுக்கு நேர்ந்த பாதிப்புக்கு தந்தை எடுக்கும் புதிய அவதாரம். கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது.

    இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப் பதை மருத்துவர் உறுதிப்படுத்த…

    அந்தக் காமுகனை கண்டுபிடித்து கொல்ல தந்தையும் மகளும் திட்டமிடுகிறார்கள்.
    அவனை கண்டு பிடித்து பழி வாங்கினார்களா? என்பது பதற்றமும் பரபரப்புமான கிளைமாக்ஸ்.
    அப்பாவாக பிரேம்ஜி, மகளாக திவ்யதர்ஷினி.

    மகளே தன் உலகம் என்று வாழ்ந்து வரும் கிராமத்து தந்தை, எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாத அந்த தந்தை மகளுக்கு நேர்ந்த கொடுமைக்காக எந்த எல்லைக்கும் போக துடிக்கும் இடத்தில் உள்ளுக்குள்ளே பொங்கி வடியும் ஒரு எரிமலையின் சீற்றத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் பிரேம்ஜி.

    மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக மட்டுமின்றி நண்பனாகவும் அவரது பாசப்பயணம் படத்தை தூணாக தாங்கி நிற்கிறது. இதுவரை காமெடியாகவே பார்த்து பழக்கப்பட்ட வரை இப்படி ஒரு வல்லமை மிகு கேரக்டரில் பார்க்கும்போது நிஜமாகவே பிரேமிக்கிறோம் ஜி.

    மகளாக நடித்த அந்த குட்டிப் பெண் இன்னொரு நடிப்பு அற்புதம். அவனை எப்படியாவது கண்டு பிடிச்சு கொன்னுடணும்பா’ என்று சொல்லும் இடத்தில் அந்த வலி நமக்குள்ளும் கடந்து போவதென்னவோ நிஜம்.

    போலீஸ் இன்ஸ்பெக்டராக ’வழக்கு எண்’ முத்துராமன், கான்ஸ்டபிளாக சூப்பர் குட் சுப்பிரமணி, தொழிலதிபராக சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக விது, பள்ளி ஊழியராக திலீபன் மருத்துவராக வரும் தீபா சங்கர் சிவ காட்சிகளே என்றாலும் சிறப்பு.

    இசையமைப்பாளர் ஜி.கே.வி. இசையில் வெங்கட் பிரபு பாடும் மகளே மகளே பாடல்
    மனதுக்கு நெருக்கமானது.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் கருப்பையா முருகன். பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய அவலத்தை ஆணி அடித்து சொல்லி இருக்கிறார். மகளின் வலிக்கு தந்தையின் வலிமை எப்படி ஒத்தடம் கொடுக்கிறது என்பதை சொன்ன விதத்திலும் சூப்பர்ப்.

    மொத்தத்தில் இந்த வல்லமை, வலிமை.

  • கேங்கர்ஸ் – திரை விமர்சனம்

    கேங்கர்ஸ் – திரை விமர்சனம்

    நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சுந்தர் சி-, வடிவேலு கூட்டணி காமெடிக் கொடி பிடித்திருக்கும் படம். அரசுப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போக, அந்தப் பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரேசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார் புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை ஆசிரியர் என்ற போர்வையில் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. இதே சமயத்தில் சுந்தர் சி. அந்த பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார்.

    உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி இந்தப் பள்ளியின் தாளாளர் என்ற முறையில் தனது தம்பி அருள்தாசுடன் சேர்ந்து பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்து வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப் பார்த்த கேத்ரின் தெரசா, சுந்தர் சி தான் அந்த அண்டர் கவர் போலீஸ் என நினைக்கிறார்.

    இந்த நிலையில் மாணவி காணாமல் போனதற்கு மைம் கோபி அண்ணன் மகன் தான் காரணம் என தெரிந்து கொள்ளும் சுந்தர் சி, அவரை கடுமையாக தாக்க… அவர் கோமாவுக்கு போக… தகவல் தெரிந்து வரும் தந்தை ஹரீஷ் பெராடி மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுந்தர் சி. யை வெறியுடன் தேடுகிறார்.

    உண்மையில் சுந்தர் சி.க்கும், ஹரீஷ் பெராடிக்கும் என்ன தொடர்பு? இருவரும் சந்திக்கும்போது என்ன நடந்தது?
    என்பது படத்தின் மீதி க் கதை.கதையைக் கேட்கும் போது அதிரடி தூள் பறக்கும் என்று எண்ணத் தோன்றும். உண்மையில் அதிரடி பொறி பறக்கிறது அதற்கு நிகராக காமெடியும் அரங்கை சிரிப்பால் நிறைக் கிறது. உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர் சி. எதிரிகளை அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் இன்னொரு உடற்பயிற்சி ஆசிரியர் வடிவேலு மீது அந்தப் பழி வந்து சேர்வதெல்லாம் படத்தின் அதிரிபுதிரி காமெடி ஆகி விடுகிறது.

    சிறு இடைவெளி விட்டு மீண்டும் அதிரடியை கையில் எடுத்திருக்கிறார் நாயகன் சுந்தர் சி. சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அனல் தெரிக்கிறது. மனைவி வாணி போஜனுடனான பிளாஷ் பேக்கில் பாசமிகு கணவனாக நடிப்பில் பரிமளிக்கிறார். மனைவியாக வரும் வாணி போஜன் நம்பிக்கை துரோகத்துக்கு பலியாகும் இடத்தில் கண்களை குள மாக்கி விடுகிறார்.

    உடற்பயிற்சி ஆசிரியராக வரும் வடிவேலு, எதிரிகளிடம் இசகுபிசகாக சிக்கிக் கொள்ளும் இடங்களில் எல்லாம் சிரித்து சிரித்து வயிறு சுளுக்கி கொள்கிறது. தியேட்டர் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸில் கிராமத்து பாட்டி கெட்டப்பில் வடிவேலு தன் மருமகளுக்கு நீதி கேட்கும் காட்சி அரங்கத்தை சிரிப்பால் நிரப்பி வைக்கிறது.

    அநியாயத்தை தட்டிக் கேட்கும் பள்ளி ஆசிரியையாக கேத்ரின் தெரசா, நடிப்பில் கம்பீர நடை போடுகிறார். ஒரு பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு ரசிக மகா ஜனங்களை குதூகலிக்கவும் வைக்கிறார். வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி காளை தனித்து தெரிகிறார்கள். சந்தான பாரதி, டெலி போன்ராஜ், முனீஸ் காந்த், பக்ஸ், விச்சு சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் இணைந்து சிரிக்க வைக்கிறார்கள். சத்யாவின் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசை ரகளை.

    எழுதி இயக்கியிருக்கும் சுந்தர்.சி, தனது வழக்கமான கஅதிரடி பாணியில் காமெடி ஆட்டம் பாமை வெடிக்க விட்டிருக்கிறார்.
    தியேட்டர் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ்சில் சிரிப்பில் தியேட்டர் குலுங்கிப் போகிறது.

    வின்னர் கூட்டணி இப்போதும் வின்னர்ஸ்.

  • சச்சின் – திரை விமர்சனம்

    சச்சின் – திரை விமர்சனம்

    கண்டதும் காதல் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியா. அவ்வப்போது அவரை அன்பால் ஆகர்ஷித்து காதலை அவர் வாயாலே சொல்ல வைக்க முயல்பவர் நாயகன் விஜய்.கல்லூரியில் படிக்கும் இந்த இருவருக்குள்ளும் காதல் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்க… கடைசியோ கடைசியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் நீயாக என்னிடம் காதல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் அதன் பின் நீ யாரோ நான் யாரோ… என்கிறார் விஜய்.

    30 நாட்களில் ஜெனிலியா விஜய் யிடம் காதலை சொன்னாரா என்பது சொட்ட சொட்ட இதயம் நனைக்கும் காதல் கதை.2005 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தில் விஜய்யை ஸ்டைலிஷாக ரசிக்க முடிகிறது. படம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் துறுதுறு விஜய் ரொம்பவே ரசிக்க வைக்கிறார்.

    ஜெனிலியா மட்டுமென்ன… அவர் சிரித்தாலும் அழகு கோபத்தில் உம் மென்றிருந்தாலும் அழகு.சந்தானம், வடிவேலு, பாலாஜி, மயில்சாமி, சாம்ஸ் வகையறாக்கள் காமெடி இப்போதும் வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன.

    ஓரிரு காட்சிகளில் வந்தாலும் நெஞ்சில் அனல் மூட்டிப் போகிறார் பிபாஷா பாசு.
    விஜய்யின் அப்பாவாக ஒரு காட்சியில் வந்தாலும் ரகுவரன், நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
    தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் இளமையின்
    வார்ப்பாய் ரசிக்க வைக்கின்றன.

    ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமரா விஜய், ஜெனிலியா இருவரையும் இன்னும் அழகாக்கி தருகிறது.எழுதி இயக்கியிருக்கும் ஜான் மகேந்திரன், படம் முழுக்க சொல்லி இருப்பது இளமைத் துடிப்புடன் கூடிய ஒரு அழகான காதலை. அதனாலேயே 19 வருடத்திற்கு முன்பு வந்த இந்த படம்ரீரிலிசிலும் 19 ஆகவே இளமை சொட்டுகிறது.

    இந்த சச்சின் அப்போது அடித்ததும் சிக்ஸர். இப்போது அடிப்பதும் சிக்ஸர்.

  • அம்..ஆ..! – திரை விமர்சனம்

    அம்..ஆ..! – திரை விமர்சனம்

    கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
    இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார்.

    திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார்.
    இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில் பட்ட தேவதர்ஷினி மலை கிராமத்தில் இருந்து வெளியேறி நகருக்கு வந்து தனக்கு ஏற்கனவே அறிமுகமான நர்ஸ் ஒருவரை தேடுகிறார்.

    தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரிக்கும் திலீஷ் போத்தன் யார்?, அவர் தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரித்ததன் பின்னணி என்ன என்பதை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

    எப்போதும் காமெடி எப்பவாவது குணச்சித்திரம் என்று
    நடித்து வந்த தேவதர்ஷினி, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் தன் இருப்பை நிரூபிக்கிறார். குழந்தையை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தெரிய வந்த நேரத்தில் தொடங்கி அவர் நடிப்பு வேறு லெவல்.

    யதார்த்தமான நடிப்பு மூலம் முதல் பாதி படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் திலீஷ் போத்தன். சாலைப் பணி மேற்பார்வையாளராக அந்த மலை கிராமத்தில் அடி எடுத்து வைக்கும் திலீஷ் போத்தன், எந்த ஒரு காட்சியிலும் நடிக்காமல் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் மௌனம் தான் முதல் பாதி படத்தின் ஜீவனாகவும் மாறி இருக்கிறது.

    ஊர்த் தலைவராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி, ஆசானாக வரும் பெரியவர், மீரா வாசுதேவன், ஸ்ருதி ஜெயன் தங்கள் கேரக்டர்கள் மூலம் நம்மோடு ஒன்றி விடுகிறார்கள்.
    மலை கிராமத்தின் அழகையும் ஆபத்தையும் ஒரு சேர காட்டி இருக்கிறது அனீஷ் லாலின் கேமரா.

    கோபி சுந்தரின் இசையில், மலை கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடல் மனதை பிழிந்து எடுக்கிறது.ஒரு மலை கிராமம், அங்கிருக்கும் மாறுபட்ட மனிதர்கள், அங்கு புதிதாக வரும் ஒரு நபர் என்ற பின்னணியில் தொடங்கும் இந்த கதை, தேவதர்ஷினியின் வருகைக்கு பிறகு எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. வாடகை தாயின் சோகம் வரை மனதை பிழிந்து எடுத்து விடுகிறது

    தாமஸ் செபஸ்டியன் இயக்கி இருக்கிறார். ஒரு குழந்தை, மூன்று பெண்களின் பின்னணியில் கதை சொன்ன விதத்தில் படம் சுலபத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடுகிறது. அம்மா என்றால் சும்மா இல்ல!

  • டென் அவர்ஸ் – திரை விமர்சனம்

    டென் அவர்ஸ் – திரை விமர்சனம்

    கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர…
    சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

    பெண் கடத்தல்,, பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடித்து சிபி சத்யராஜ் சபரிமலை சென்றாரா என்பது திகுதிகு விறு விறு திரைக்கதை.போலீஸ் இன்ஸ்பெக்டராக சிபி சத்யராஜ், காக்கி
    உடைக்கு நடிப்பில் கம்பீரம் சேர்க்கிறார். எதிரிகளை கண்டுபிடிக்க அவர் காட்டும் முனைப்பும் வேகமும் காக்கி
    உடைக்கான கம்பீரம். அடிதடியிலும் ஆக்ஷன் தெறிக்கிறது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கஜராஜ், மருத்துவராக ஜீவா ரவி பொருத்தமான பாத்திரங்களில் பளபளக்கிறார்கள். பேருந்தில் கொலை செய்யப்படும் இளைஞராக ராஜ் ஐயப்பன், பஸ் கண்டக்டராக .முருகதாஸ், வில்லனாக திலீபன் விறுவிறுப்பான கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள்.

    இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக நமக்குள் கடத்துகிறது ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கின் கேமரா. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்தின் பரபரப்போடு இணைந்த அழகுக் கலவை. கடத்தப்பட்ட இளம் பெண்ணுக்கும் பஸ்ஸில் தாக்கப்பட்ட பெண்ணுக்குமான திரைக்கதை இணைப்பு கிளைமாக்சை இன்னும் பரபரப்பாக்கி விடுகிறது.எழுதி இயக்கி இருக்கும் இளையராஜா கலியபெருமாள், ஒரு கடத்தல் கதையை கையாண்ட விதத்தில் சுலபமாக நம் மனதுக்குள் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார்.

    திரில்லர் எக்ஸ்பிரஸ்.

  • நாங்கள் – திரை விமர்சனம்

    நாங்கள் – திரை விமர்சனம்

    சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கும் படம்.
    1998 இல் நடக்கிற கதை. ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வரும் ராஜ்குமாருக்கு மூன்று மகன்கள். மனைவியை பிரிந்து வாழும் ராஜ்குமாருக்கு மகன்கள் தான் எல்லாமே.
    தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தொடங்கி தந்தையின் ஷுவை பாலிஷ் போட்டு வைப்பது வரை எல்லாமே இந்த நண்டு சிண்டுகளான மூவர் தான்.

    இந்த மூன்று சிறுவர்களும் அந்த தந்தையிடம் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. சிறு தவறு செய்தாலும் போட்டு புரட்டி எடுத்து விடுவார் தந்தை. இதனால் மூன்று பிள்ளைகளும் அந்த வீட்டில் ஒருவித நடுக்கத்துடனே இருந்து வருகிறார்கள்.

    இந்த குடும்பத்தில் அடுத்த கட்ட சோதனையாக ராஜ்குமார் நடத்தி வரும் பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை. இதனால் பள்ளியை விற்று கடன்களை அடைக்கிறார்.

    இந்த நேரத்தில் மறுபடியும் மனைவி அந்த வீட்டுக்குள் வருகிறார். மகன்கள் ஓரளவு வளர்ந்து விட்ட நிலையில் ஒரு தாயாகவும் அவர்களை அரவணைத்துக் கொள்ளலாம் என்பது அந்தத் தாயின் முடிவாக இருக்க, நடந்ததோ வேறு. நாம் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்று கூறி வலுக்கட்டாயமாக மனைவியை வெளியே அனுப்பி வைக்கிறார் அந்த ஹிட்லர் ராஜ்குமார்.

    இப்போது ஹைதராபாத்தில் ராஜ்குமாருக்கு ஆசிரியர் வேலை கிடைக்க, மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். வேறு வழி இன்றி மகன்களும் சம்மதம் தெரிவிக்க… அப்போது அவர்கள் வீட்டில் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. அதையும் தாண்டி அவர்கள் பயணம் தொடர்ந்ததா என்பது இயல்பும் நெகிழ்வு மான கதைக்களம்.

    கண்டிப்பும் கறாரு மான அந்த அப்பா கேரக்டரில் அப்துல் ரபே அட்டகாசமாக பொருந்தி இருக்கிறார். மகன்களின் வேலைகளில் குறை கண்டுபிடிப்பது, அதற்கு உடனே தண்டனை வழங்குவது, தண்டனையின் போது ஒரு மகன் ஒன் பாத்ரூம் போவது என வார்த்தைகளிலும் செயல்களிலும் மிரட்டும் அந்த தந்தை கேரக்டர் அக்கிரம தாண்டவமே ஆடு கிறது. கல்லுக்குள் ஈரம் மாதிரி தனது பள்ளி ஆசிரியர்களுக்கு கடைசி சம்பளம் கொடுத்து விட்டு என்னை அழ வைக்காதீங்க அவர் உடைந்துபோகும் காட்சி அவர் நடிப்பில் இன்னொரு மேஜிக்.

    நடிப்பில் அடுத்த இடம் அந்த மூன்று சிறுவர்களுக்கும். மூத்தவன் மிதுன், அடுத்தவன் ரித்திக், இளையவன் நித்தின் மூவருமே அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களுக்குள்ளான அன்னியோன்யமும், அப்பா வந்த பிறகு அவர் கேட்கும் கேள்விகளுக்கு எப்போது அடி விழுமோ என பதில் அளிக்க பயந்து நடுங்கும் இடங்களிலும் நடிப்பில் அற்புதமாக ஸ்கோர் செய்கிறார் கள். இவர்களின் அம்மாவாக வரும் பிரார்த்தனா குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிறைந்து போகிறார்.

    இசையமைத்திருக்கும் வேத் சங்கர் தனது பின்னணி இசையால் படத்துக்கு சேர்த்திருப்பது பெரும் பலம் .கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத் தொகுப்புடன் இயக்கவும் செய்திருக்கிறார் அவினாஷ் பிரகாஷ்.

    மனைவியைப் பிரிந்து வாழும் தந்தையிடம் வளரும் குழந்தைகள் எப்படி யான மனநிலையில் யில் உள்ளனர் ?அந்தத் தந்தை தனக்குள் குமைந்து கொண்டிருக்கும் அளவுக்கு அவருக்கு நேர்ந்த உளவியல் சிக்கல் தான் என்ன? என்பதை உணர்ச்சிபூர்வமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் அவினாஷ் பிரகாஷ். மனைவிக்கும் அவருக்குமான விரிசல் எதற்காக என்பதை சொல்லாததால் அது தொடர்பான காட்சியில் மட்டும் அழுத்தம் மிஸ்ஸிங்.